மின் கட்டண அதிகரிப்பானது ஒரு நியாயமான செயற்பாடெனத் தெரியவில்லை. இதனை திருத்தியமைக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது மின்கட்டண உயர்வு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகரிக்கப்பட்டது, சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையோ என்பது தேவையில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பானது ஒரு நியாயமான செயலாகத் தென்படவில்லை. இதனைத் திருத்தியமைக்க உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் மின்சார சபையில் தலைவிரித்தாடுகின்ற மாபியாக்களை உடனடியாக இனம்கண்டு விரட்டியடிக்க வேண்டும். குறிப்பாக டீசல் திருடும் கும்பல்கள் மற்றும் தமது அடியாட்களை மின்சார சபையில் வேலைக்கமர்த்தும் கும்பல்கள் ஆகியவற்றை முதலில் இனம்காண வேண்டும்.
இதேவேளை, குறித்த பிரச்சினை கடந்த 1977 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் உருவான நிலைமையாகும். அதன் பின்னர் தான் அரச உடைமையாகவிருந்த மின்சார சபையானது தனியார் மயமாக்கப்பட்டது இதிலிருந்தே இப் பிரச்சினை ஆரம்பமாகியது.
இப் பிரச்சினையானது எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தாலும் இது நீண்டு கொண்டே செல்லும். இது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் பிரச்சினையே கிடையாது.
இப் பிரச்சினையை அரசினால் தீரக்க முடியாத அதேவேளை, மின்சார துறை முழுமையாக அரசின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக